Thursday, March 21, 2013
ஒலிக்கிளர்ச்சி
கண்களை இறுக்கிக் கட்டி
கைகளைப் பின்புறம் பிணைத்து
நிர்வாணமாய்
முதுகில் சுடப்பட்டவர்களின்
மரண ஓலம்
சாவின் கொடூர முகத்தை
சுற்றி நின்று ரசித்தவர்களின்
எக்காளச் சிரிப்பு
வெற்றுக் களிமண்ணை
ரொட்டியாய் சுட்டு சாப்பிடும்
குழந்தைகளின் கேவல் சத்தம்
முகமெங்கும் அப்பிக் கிடக்கும் மண்ணும்
சீழ் வடியும் நிணமுமாய்
மதக்கூடங்களின் வாசலில்
கையேந்தித் திரியும்
கைவிடப்பட்டவர்களின் ஆழ்மன அரற்றல்கள்
சித்திரவதை பொறுக்காமல் கதறியழும்
பரத்தையின் கூக்குரல்
ஓயாமல் உலகின் ஏதாவொரு மூலையில்
வெடித்துக் கொண்டேயிருக்கும் மார்ட்டர்கள்
உலகின் எல்லா அவலங்களின் சப்தமும்
தன் காதுகளை வந்தடைய
கிளர்ச்சியடைந்த கடவுள்
கரமைதுனம் செய்யத் துவங்குகிறார்
ரியலிசம்
சர்ரியலிசம்
மேஜிக்கல் ரியலிசம்
போஸ்ட் மாடர்னிசம்
எதுவும் அறிந்திராத
சாலையோர ஓவியனொருவன்
பசியில் ஏங்கியழும்
தன் குழந்தை முகம்
மனதில் நிறுத்தி
தான் பார்த்திராத
கடவுளின் படத்தை
வரையத் தொடங்குகிறான்
மழை மட்டும் வந்து விடக் கூடாது
என்று வேண்டியபடியே
கருவறை பிளந்து
வெளிக்கொள்ளப்பட்ட
சவலைப் பிள்ளையொன்றின்
அழுகுரல் கேட்டு
உச்சநிலையெய்திய
கடவுளின் சுக்கிலத்திலிருந்து
தெறித்து பூமியில் விழும்
சொட்டொன்று
மழையின் முதல் துளியாய்
(கொம்பு சிற்றிதழ் - இதழ் ஒன்றில் வெளியானது)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment