Thursday, March 21, 2013

சாம்பல் மிருகங்கள்

சதுரம் வட்டம் முக்கோணம் செவ்வகம்
விதவித வடிவங்களில்
தபால்தலைகளை சேகரிப்பது
ரொம்பப் பிடித்தமானது அபிக்கு
கிடைப்பதற்கரிய தபால்தலைகளை
பத்திரமாக ஒட்டிவைக்கிறாள்
மெலிதான பிளாஸ்டிக் உறைகளுக்குள் போட்டு
எளிதாக கிடைக்கும் மற்ற தபால்தலைகளை
அவள் அழகாக வெட்டி ஒட்டமானும் புலியும் பூனையும் பட்டாம்பூச்சியும்
அபியைப் பார்த்து சிரிக்கின்றன
தன் வாழ்வின் மாபெரும் பொக்கிஷம்
அதுவென நம்பினாள் அபி
பிறிதொரு நாளின் எதிர்பாரா சமயம்
வீட்டில் சட்டென்று பற்றிக் கொண்ட தீயில்
சாம்பலாகிப் போன ஆல்பத்தை பார்த்து
அழுதுகொண்டிருந்த அபியை
என்ன சொல்லி தேற்றுவதெனத் தெரியாமல்
மீண்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்
என சொன்னவனை நிமிர்ந்து பார்த்து
தபால்தலைகளை வாங்கலாம்
செத்துப் போன புலியும் மானும்
பூனையும் பட்டாம்பூச்சியும்
மறுபடியும் வருமா
கண்கள் கசக்கி கேட்பவளிடம்
பதில் சொல்ல முடியாமல்
திகைத்து நிற்கிறேன் நான்.

(முகுந்த் நாகராஜனுக்கு)

(மந்திரச்சிமிழ் போர்ஹேஸ் சிறப்பிதழில் வெளியானது)

No comments:

Post a Comment