Thursday, March 28, 2013

முள்கிரீடம்

அந்தியின் பொன்மஞ்சள் தேய்த்தொழித்து
வெனிலா ஒளியில் மினுங்கிடும் பேராலயம்
தமக்கு முன்பாகச் செல்பவரின் சமூகத்தில்
குறை சொல்லிப் புலம்பியழும் பெருங்கூட்டம்
பிரார்த்தனை தீர்த்துத் திரும்புகிறவன் பார்வையில்
சாலையில் விரைந்திடும் வாகனங்களின் நடுவே
பிள்ளையேந்தி யாசகம் கேட்கும் யட்சியொருத்தி
நசிந்து விலகிய உடையின் வழி பிதுங்கும் தேகம்
நெடுமரத்தைப் படர்ந்த கொடிகள் விம்மித் தெறிக்க
முதல் கனியின் மீதாக ஊர்ந்திடும் சர்ப்பம்
உயிர்த்தலம் பற்றி உறிஞ்சுகிறான் உலகின் கருணையனைத்தும்
தன்னிலை உணர்ந்தவன் சற்றே நிமிர்ந்திட தென்பட்டது
மரியாய் மாறிப்போன யட்சியும்
கையிருந்த தேவகுமாரனின் விழிகளில் உறைந்த உதிரமும்
முள்கிரீடம் தரித்தவனாய் மீண்டும் ஆலயம் நுழைபவன்
முன்பாய் இருகரம் நீட்டி எதிர்கொண்டவர்
புன்னகையோடே சொல்கிறார்
பிரியமானவர்களே
நானே உங்களுக்கு
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்

(வெயில்நதி இதழ் - 3)

1 comment:

  1. இத வீட்டுல உங்க வாயால வாசிக்க கேட்ருக்கேன் மாப்ள.. நல்லாயிருக்கு

    ReplyDelete