Thursday, March 28, 2013

கருணயற்றவனின் இரவு

நெருக்கிப் பின்னிய
வலையொரு கரம்
மின்மினிகள் மிதந்தலையும்
தீபம் மறுகரமென
களம் புகும் தேவகுமாரன் விழிகளில்
மிச்சமில்லை கருணையேதும்

சிறுபிள்ளைத் தொட்டிலென
காற்றுக்குள் இலக்கில்லாது
சென்று மீளும் போர்வாள்
அரூபமாய்த் தீட்டும்
வர்ணமில்லா ஓவியம்

மெல்லியதொரு தீண்டலில்
நிசப்தம் கலைத்து
எழுந்தடங்கும் ஒளிச்சிதறல்கள்
சுற்றிச் சுழன்று துடிதுடித்து
வானேகும் உயிர்

சேனமிடப் படாத
நான்கு புரவிகளில்*
தனக்கானதன் மீதேறிப்
பயணத்தைத் தொடரும் மரணம்

(*விவிலிய நம்பிக்கை)

(வெயில்நதி இதழ் - 3)

No comments:

Post a Comment