Thursday, March 21, 2013

வலி


என் கனவுகளின் வனாந்திரங்களில்
அலைந்து திரிகிறதுன் நினைவுகள்
வன்மம் கொண்ட மிருகமென
இருள் சூழ்ந்த பாதைகளில்
இலக்கற்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இ(எ)ன்றேனும் மழை வரக்கூடுமென
காத்திருக்கிறது நிலம்
ரகசியமாய் காற்றுடன் உரையாடும்
மரங்களின் வேர்களில் வழிந்தோடுகிறது
தொலைந்துபோன காதலின் ஸ்பரிசங்கள்
தோல்வியின் வேதனைகளை தாங்கியபடி
கருமேகங்களென சிறகடித்துப் பறக்கும்
கறுப்பு நிறக் கொக்குகள் வானில்
குருதியின் ருசியறிந்த ஓநாய்கள்
காத்திருக்கின்றன தருணத்தை எதிர்நோக்கி
எங்கிருந்தோ கசியத்தொடங்குகிறது
துரோகத்தின் கொடிய நெடி
மாயமானின் நாபியில் இருந்து
பெருகிப்பெருகி மூச்சடைக்கும்
அந்நெடியில் இருந்து வெகுண்டோடி
கனவுகள் கிழித்து கண்விழித்தவன்
என் படுக்கையில் கிடந்தேன்
இருந்தும் அதிகாலைப் பனியென
உடம்பின் மீது உறைந்து போயிருந்தது
துரோகத்தின் தீரா நெடி

(மந்திரச்சிமிழ் போர்ஹேஸ் சிறப்பதிழில் வெளியானது)

No comments:

Post a Comment