Wednesday, March 27, 2013

சொற்களின் நீரூற்றும் நிறமற்றப் பச்சோந்தியும்

இருளென்றும் வெளிச்சமென்றும் 
பிரித்தறிய முடியாப் பொழுதுகளாலான 
அடர்கானகத்தின் நடுவே
மலையடிவாரத்தில் தான் தேடிவந்த 
சொற்களின் நீரூற்றைக் 
கண்டுபிடித்தான் மந்திரன்
மட்டற்ற மகிழ்ச்சியுடன் 
அதனுட் புக முற்பட்டவனைத் 
தடுத்து நிறுத்திய மாயக்குரல் 
முன்புதிரைத் தீர்த்தபின்னரே
நீரூற்றுக்குள் நுழையமுடியுமென எடுத்துரைக்க
மந்திரனின் கண்முன் விரிந்தது
அரூபத்திரையில் பொன்னிற எண்களினாலான புதிர்
பின் தொடர்ந்த தனிமையைப் பச்சோந்தி என உருமாற்றி
தோளின் மீது இருத்தியவனாக புதிருக்குள் நுழைந்தான்
பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான எண்களும் 
ஆயிரம் கட்டங்களும் கொண்ட புதிர்
காலத்தோடு  தன்னிருப்பை மாற்றிக் கொண்டேயிருக்க
காலவெளியில் மந்திரனும் சுழன்றபடியே 
எண்களைக் கட்டங்களுக்குள் அடக்கவியலாது
மூச்சுத்திணறிக் கொண்டிருந்தான்
புதிருக்குள் தொலைந்து போயிருந்த 
பச்சோந்தியின் உடம்பிலிருந்து நிறங்கள் உதிரலாயின 
வனமெங்கும் இருளப்பிய கிரகணப் பொழுதில்
புதிரத்தனையும் பொருத்தி முடித்ததாக
நம்பியவன் கண்கள் வலது மூலையின் நிரப்பப்படாத
இரு கட்டங்களில் இடறிவிழுந்தன
பூர்ணசமர்ப்பணமாய் 
வாளெடுத்து தன் கழுத்தை
வெட்டியெறிகையில் 
துண்டாகிய தலை பூஜ்யம்
தனியே கிடந்த உடல் ஒன்று 
தீர்ந்துபோனது புதிர்
நிறமற்ற பச்சோந்தியின் 
கண்ணீர்த்துளிகள்
காற்றில் விசித்தபடி
தனித்தலைகின்றன

(உயிர்மொழி இதழ் - 2)

No comments:

Post a Comment